ஜெப்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sports AB: இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் சஹீர் கான்
லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ஜெப்னா கிங்ஸ்’ அணியின் உரிமையை, ஸ்டாக்ஹோமைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளையாட்டு உரிமை நிறுவனமான Anchor Sports AB நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரைச் சம உரிமையாளர்களாகக் கொண்டு Anchor Sports AB) நிறுவனம் இயங்குகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதற்கமைய, இனிவரும் நாட்களில் ஜெப்னா கிங்ஸ் அணி Anchor Jaffna Kings என்ற பெயருடன் எல்.பி.எல் தொடரில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெப்னா கிங்ஸ் அணியின் முந்தைய உரிமையாளரான ‘ஸ்போர்ட்ஸ் கம்யூன்’ (Sports Commune) நிறுவனத்தின் இணை உரிமையாளரும், முன்னாள் இந்திய 19 வயதிற்குட்பட்ட அணி வீரருமான மன்ஜோத் கல்ரா, ஆட்ட நிர்ணயச் சதி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜூலை 23 ஆம் திகதி ஜெப்னா கிங்ஸ் அணி உரிமையாளர்களின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் எல்.பி.எல் தொடரின் உரிமைதாரரான ஐ.பி.ஜி நிறுவனம் ஆகியவற்றின் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் இவ்வணி கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போதைய இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜெப்னா அணி மீண்டும் ஒரு நிலையான உரிமையாளரின் கீழ் செயல்படவுள்ளது.
Anchor Sports AB நிறுவனம் ஏற்கனவே பெல்ஜியத்தின் ‘யூரோப்பியன் டி20 பிரீமியர் லீக்’ தொடரின்; Antwerp Anchors அணியையும், கனடாவின் ‘சுப்பர் 60 லீக்’ தொடரில் விளையாடும் Vancouver Anchors ஆண் மற்றும் பெண் அணிகளையும் சொந்தமாகக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஜெப்னா கிங்ஸ் அணியும் தற்போது இந்தச் சர்வதேச விளையாட்டுப் பட்டியலில் இணைந்துள்ளது.
எல்.பி.எல் தொடரின் முதல் அத்தியாயம் முதல் தொடர்ச்சியான திறமையையும், வெற்றிகளையும் வெளிப்படுத்தி வரும் ஜெப்னா கிஙஸ் அணி, இதுவரை நிறைவடைந்துள்ள ஐந்து அத்தியாயங்களில் 4 முறை சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி லீக்கின் முன்னணி அணியாகத் திகழ்கிறது.
அதேபோல, நடப்பு அத்தியாயத்திலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் இவ்வணி, 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டது. பானுக ராஜபக்ஷவின் தலைமையின் கீழ், இந்த ஆண்டும் எல்.பி.எல் சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய பலமான அணிகளில் ஒன்றாக ஜெப்னா கிங்ஸ் அணி உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், எல்.பி.எல் தொடருடன் இணைவதில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ள Anchor Sports AB நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ஐ.பி.ஜி நிறுவனம், வீரர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து ஜெப்னா கிங்ஸ் அணியின் வெற்றியை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, Anchor Sports AB நிறுவனத்தை வரவேற்றுப் பேசிய எல்.பி.எல் தொடரின் உரிமைதாரரான ஐ.பி.ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன், “ஜெப்னா கிங்ஸ் அணியைக் கைப்பற்றியுள்ள Anchor Sports AB நிறுவனத்தை எல்.பி.எல் குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த லீக்கின் ஆறு ஆண்டு கால வரலாற்றில் 4 முறை சம்பியன் பட்டங்களை வென்று, ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஜெப்னா அணி திகழ்கிறது. Anchor Sports AB நிறுவனம் இந்த அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தை மேலும் முன்னெடுத்துச் சென்று, புதிய தொலைநோக்குப் பார்வையையும் ஆற்றலையும் கொண்டு வந்து லங்கா பிறீமியர் லீக்கின் தரத்தை உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
Anchor Sports AB உரிமையாளர் நாகேந்திர சித்தௌதம் கூறுகையில், “இது எங்களுக்கு ஒரு முக்கியமான படியாகும். இலங்கை வளமான கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். மேலும் எல்.பி.எல் மிகக் குறுகிய காலத்தில் ஒரு சிறந்த, போட்டித்தன்மைமிக்க லீக்காக உருவெடுத்துள்ளது. ஜெப்னா அங்கர்ஸ் அணி, நாங்கள் உலகளவில் கட்டமைத்து வரும் சர்வதேச ‘அங்கர்’ பிணையத்தின் ஒரு அங்கமாக இருக்கும். ஜெப்னா அணியில் முதலீடு செய்வதிலும், லீக்கின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்காற்றுவதிலும் நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.” என்றார்.
Anchor Sports AB நிறுவனத்தின் இணை உரிமையாளர் சஹீர் கான் கூறுகையில், “இலங்கையிலிருந்து உருவாகும் பந்துவீச்சாளர்கள், அவர்களின் புதுமை மற்றும் வித்தியாசமான நுட்பட் ஆகியவற்றைப் பலகாலமாக நான் வியந்து பார்த்திருக்கிறேன். நான் வந்து விளையாடிய, அருமையான நினைவுகளைக் கொண்ட ஒரு நாடு இலங்கை. தற்போது உரிமையாளராக இலங்கை கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மாறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜெப்னா கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்.” என்றார்.
இதேவேளை, லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல தெரிவிக்கையில், “சஹீர் கான் போன்ற ஒரு சிறந்த வீரர் ஜெப்னா அணியின் உரிமையாளராக இணைந்திருப்பது இந்த லீக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய பலமாகும். இளம் இலங்கை வீரர்களுக்கு அவர் அளிக்கும் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் களத்திலும் களத்திற்கு அப்பாலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

