கெண்டி றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக Optimum Health Care நிறுவனம் கைகோர்ப்பு
லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 6ஆவது அத்தியாயம் தொடங்குவதற்கு முன்பாக, கெண்டி றோயல்ஸ் அணியின் 50 சதவீத பங்குகளை ‘ஆப்டிமம் ஹெல்த்கேர்’ (Optimum Health Care Pvt Ltd) நிறுவனம் வாங்கியுள்ளதாக கண்டி றோயல்ஸ் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Optimum Health Care Pvt Ltd நிறுவனம் இலங்கை, இந்தியா மற்றும் அண்டை பிராந்தியங்களில் உள்ள முன்னணி மருத்துவத் துறைகளில் முதலீடு செய்துவரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இதன் மூலம்,Optimum Health Care நிறுவனம் கெண்டி றோயல்ஸ் அணியின் தற்போதைய உரிமையாளரான சந்தியா அஜ்ஜாரபுவுடன் இணைந்து அணியை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழிலதிபரான சந்தியா அஜ்ஜாரபு, பயோடெக், தகவல் தொழில்நுட்பம், பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதலீடுகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம், முதலீடு, விளையாட்டு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பிற்குமே உள்ள பரஸ்பர ஆர்வம் காரணமாக இந்த கூட்டாண்மை ஏற்பட்டுள்ளது. இது கெண்டி றோயல்ஸ் அணியை வணிக ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் ஒரு பலமிக்க அணியாக மாற்ற உதவுவதோடு, கண்டி மற்றும் மத்திய மாகாண ரசிகர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த தளமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய இணை உரிமையாளரை வரவேற்றுப் பேசிய எல்பிஎல் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல, “இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சார்பில் Optimum Health Care நிறுவனத்தை கெண்டி றோயல்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். வலுவான மற்றும் அர்ப்பணிப்புள்ள உரிமையாளர்கள் அமைவது எல்பிஎல் தொடரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்த முதலீடு எல்பிஎல் தொடரின் மீதான வணிக ரீதியான நம்பிக்கையை காட்டுகிறது,” என்றார்.
இந்த நிலையில், ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்து தெரிவிக்கையில், “பிராந்திய வணிக அனுபவமும், சமூக நலனில் அக்கறையும் கொண்ட ஒரு நிறுவனம் அணியுடன் இணைவது கெண்டி றோயல்ஸ் அணியின் வளர்ச்சிக்கும் ரசிகர்களின் ஆதரவிற்கும் பெரும் பலம் சேர்க்கும்.” என்றார்.
புதிய கூட்டாளரை வரவேற்றுப் பேசிய கண்டி றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் சந்தியா அஜ்ஜாரபு, “கண்டி நகரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஒரு தொழில்முறை மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த அணியை உருவாக்குவதே எமது நீண்டகால நோக்கம்.” என்று தெரிவித்தார்.
இது குறித்து Optimum Health Care நிறுவனத்தின் பணிப்பாளர் வி. நடராஜா பேசுகையில், “கண்டி மற்றும் பல்லேகல பகுதிகள் எங்கள் பயணத்தில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. எனவே கெண்டி றோயல்ஸ் அணியுடனான இந்த கூட்டாண்மை எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாகும். கண்டி மற்றும் மத்திய மாகாணத்தின் விளையாட்டுத் திறனை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கூறினார்.
இதனிடையே, Optimum Health Care நிறுவனத்தின் மற்றொரு பணிப்பாளரான அக்ஷத் ஷா கூறுகையில், எல்பிஎல் தொடர் இலங்கையின் மிகப்பெரிய விளையாட்டுத் தளமாக வளர்ந்துள்ளதாகவும், ஒரு மருத்துவ முதலீட்டு நிறுவனமாக ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்க விளையாட்டை ஒரு சிறந்த வழியாக தாங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இப்புதிய நிர்வாக மாற்றத்திற்குப் பிறகும், கெண்டி றோயல்ஸ் அணி ஒரு வலுவான அணியை உருவாக்குவதிலும், ரசிகர்களுடனான தொடர்பை மேம்படுத்துவதிலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்திற்கு நீண்ட கால மதிப்பை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

