
வர்த்தககல்வித்திட்டத்தின்மூலம்இலங்கைவர்த்தகர்களைமேம்படுத்தும் Uber Eats
உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை தருவித்துக்கொள்வதற்கான இலங்கையின் முன்னணி விநியோக பயன்பாட்டு செயலியான Uber Eats, இலங்கையில் சிறு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தில் இன்று ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. Uber Eats தளத்தில் செயற்படும் 40வர்த்தக பங்காளர்கள், மலேசியாவின் UNITAR சர்வதேச பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளனர். இந்த கற்கைநெறியானது, Institute of Governance and Compliance நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. வர்த்தக மூலோபாயம், நிதித் திட்டமிடல், சந்தைப்படுத்தல் மற்றும் தலைமைத்துவம் பற்றிய ஆழமான புரிதலை தமது வர்த்தக பங்காளர்களுக்கு வழங்குவதற்காக, Uber Eats இந்த கல்வித் திட்டத்தை வழங்கியுள்ளது. இது அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க கலந்துகொண்டதோடு, IGC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதித் தலைவரான சமாதி பண்டார மற்றும் Uber Eats விநியோகப்பிரிவின் இலங்கை முகாமையாளர் வருண் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியின் கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, “கல்வி மூலம் சிறு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது, இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகவும் நிலையான வழிகளில் ஒன்றாகும். உள்ளூரிலுள்ள எமது தொழில்முனைவோரில் முதலீடு செய்து, துரிதமாக வளர்ந்து வரும் சந்தையில் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்குத் தேவையான கருவிகளை வழங்க உதவியதற்காக, Uber Eats நிறுவனத்திற்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகள், தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பலப்படுத்துகின்றன” என்றார்.
Uber Eats விநியோகப்பிரிவின் இலங்கை முகாமையாளர் வருண் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியான கற்றல் மிகவும் முக்கியமானது என்பதை, Uberஇல் நாம் அறிவோம். தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் சிறு வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் கல்வி கைகொடுக்கின்றது என்ற எமது நம்பிக்கையை இந்த முயற்சி வெளிப்படுத்துகின்றது. எமது வர்த்தக பங்காளர்களுக்கு முக்கியமான வணிக அறிவை வழங்குவதன் மூலம், அவர்களின் நீண்டகால வெற்றி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகின்றோம்” என்றார்.
உள்ளூர் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கான Uberஇன் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு, இந்த நிர்வாகக் கல்வித் திட்டம் மேலும் துணைபுரிகின்றது. முந்தைய முயற்சிகளில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கும் Uber Springboard நிகழ்ச்சித்திட்டம் மற்றும் விநியோக நபர்களின் யோசனைகளுடன் புத்தாக்க விடயங்களை கொண்டாடி ஆதரித்த Uber தொழில்முனைவோர் சவால் (Uber Entrepreneurship Challenge) ஆகியன இதில் உள்ளடங்கும்.
Uber Eats 2018ஆம் ஆண்டு இலங்கையில் தமது சேவையை ஆரம்பித்ததில் இருந்து, தமது சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி நாடு முழுவதும் சென்றடைந்து, இலங்கையில் சிறந்த விநியோக தளமாக மாறியுள்ளது. இம்மாத ஆரம்பத்தில், அநுராதபுரத்தில் Uber Eats தனது சேவைகளை விரிவுபடுத்தியது. 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொக்கல, தல்பே மற்றும் அஹங்கமவில் தனது சேவையை விஸ்தரித்த Uber Eats, கடந்த பெப்ரவரி மாதம் வெலிகம மற்றும் மிரிஸ்ஸ வரை விரிவடைந்து தெற்கு கரையோர பகுதிகளில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது.
Uber Eats பற்றிய அறிமுகம்
Uber Eats–ஆனது, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உள்ளூர் உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் பல்வேறு சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதியை மக்களுக்கு வழங்குகின்றது. குறிப்பாக சமைத்த உணவுகள், மளிகைப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், பூக்கள், அழகு சாதனப் பொருட்கள், செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய, ஏறத்தாழ சகல பொருட்களையும் வாடிக்கையாளர்கள் விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பெற்றுக்கொள்ள முடியும். 2018ஆம் ஆண்டில் Uber Eats ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, Uberஇன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் தளவாட நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, பல்வேறு நகரங்களுக்கு தனது சேவையை விஸ்தரித்துள்ளது. ஒரே நாளில் மளிகைப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் நிலைபேறுமிக்க முறையிலான விநியோகத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற விடயங்களுடன், இந்த தளமானது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது.