June 20, 2025
சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சியையும் சுகாதார முகாமையும் ஆரம்பித்தது Uber மற்றும் செஞ்சிலுவைச்  சங்கம்
செய்தி

சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சியையும் சுகாதார முகாமையும் ஆரம்பித்தது Uber மற்றும் செஞ்சிலுவைச்  சங்கம்

Jun 14, 2025

இலங்கையின் முன்னணி செயலி அடிப்படையிலான போக்குவரத்து அம்சமான Uber, சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சி திட்டம் மற்றும் சுகாதார முகாம் ஒன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. வீதிப் பாதுகாப்பையும் சாரதிகளின் நல்வாழ்வையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், கொழும்பில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கௌரவ டாக்டர் பிரசன்ன குணசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவருடன், Uber Sri Lanka மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமைப்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியானது, 750 சாரதிகளை அத்தியாவசிய முதலுதவி திறன்களுடன் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் 500 Uber சாரதிகள் மற்றும் 250 பொதுப் போக்குவரத்து சாரதிகள் அடங்குவர். இந்தத் திறன்கள், அவசரகால சூழ்நிலைகளின் போது சிறப்பாகச் செயற்பட அவர்களுக்கு உதவும். இதற்கு மேலதிகமாக, Uber சாரதிகள் 1000 பேருக்கான இலவச முழு உடற்பரிசோதனைகளை, மருத்துவ முகாம் வழங்கவுள்ளது.  சாரதிகளின் உடல்நலத்திலும் நல்வாழ்விலும் Uber கொண்டுள்ள அர்ப்பணிப்பினை இது வெளிப்படுத்துகின்றது.

இத்திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கௌரவ டாக்டர் பிரசன்ன குணசேன : “சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்த முயற்சியானது, தனியார் துறை நிறுவனங்கள் எவ்வாறு மனிதாபிமான அமைப்புகளுடன் கைகோர்த்து மக்களை முதன்மைப்படுத்தும் ஒரு பொதுவான இலக்கை அடைய முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றது. சாரதிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் முதலீடு செய்தமைக்காகவும், ஏனையோரும் பின்பற்றும் வகையிலான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியமைக்காகவும் Uber மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

Uber Sri Lanka Mobilityஇன் இலங்கைக்கான முகாமையாளர் கௌசல்யா குணரத்ன குறிப்பிடுகையில், “எமது செயற்பாட்டின் மிக முக்கியமான அங்கமாக ஓட்டுநர்கள் உள்ளனர். இந்த முயற்சியானது, இலங்கையை ஒவ்வொரு நாளும் நகர்த்த உதவும் மக்களை ஆதரித்து வலுப்படுத்துவதாகும். சாரதிகளை பொறுத்தவரை அவர்கள் பல மணி நேரம் வீதிகளில் தமது நேரத்தை செலவழிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில், செஞ்சிலுவைச் சங்கத்துடனான இந்தக் கூட்டாண்மை மூலம், அவர்களுக்கு உயிர்காக்கும் திறன்களை வழங்குகின்றோம். இதன்மூலம், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான எமது அர்ப்பணிப்பினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்”  என்றார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் திரு. ஜகத் அபேசிங்க குறிப்பிடுகையில், “Uber-உடன் கூட்டிணைவது, நெகிழ்வான  தொழில்முறை பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக உள்ளோருக்கு, முக்கியமான முதலுதவி அறிவு மற்றும் சுகாதார சேவைகளை வழங்க உதவுகின்றது. இந்த கூட்டிணைவானது, தயார்நிலை, பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக மீள்தன்மைக்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது” என்றார்.

இலங்கையில் Uber தனது 10ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், சாரதிகளின் திறன்களை மேம்படுத்தும் மற்றும் பரந்தளவான சமூகத்திற்கு உதவும் திட்டங்களில் தொடர்ச்சியாக முதலீடுகளை செய்து வருகின்றது.

இந்தத் திட்டமானது, செஞ்சிலுவைச் சங்கத்துடனான Uber-இன் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது. இது Uber சாரதிகளுக்கும் அவர்கள் சேவை செய்யும் பரந்த சமூகத்திற்கும் உதவுகின்றது. கடந்த 2022ஆம் ஆண்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன், நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்காக 200,000 அமெரிக்க டொலர்களை Uber நன்கொடையாக வழங்கியது. கொவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில், முன்னிலை சுகாதாரப் பணியாளர்களுக்கும் பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடிய சமூகங்களுக்கும் உதவுவதற்காக, செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 50,000 இலவச சவாரிகளை Uber வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close