தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தவும் இலங்கையின் மிகப்பெரிய மின்கல எரிசக்தி சேமிப்பு திட்டம் அங்குரார்ப்பணம்
இலங்கை முழுவதும் உள்ள 16 துணை மின் நிலையங்களில் மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை (Battery Energy Storage Systems) நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டில் இதுவரை செயல்படுத்தப்படும் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்புத் திட்டமான இதன் மூலம், தேசிய மின் கட்டமைப்பு வலுவடைவதுடன், தூய்மையான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பும் பகல் வேளையில் 40 மெகாவாட் மணித்தியாலம் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கும், இரவு வேளையில் மின்சார தேவை அதிகரிக்கும் நேரத்தில் தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவாட் மின்சாரத்தை விடுவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மற்றும் காற்றலை இவ்வாறு இரவு வேளைக்காக சேமித்து வைப்பதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்த முடியும் என்பதுடன், மின்சார தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் கனிம எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களில் தங்கியிருப்பதைக் குறைக்கவும் இது உதவும்.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால், மின்சாரத்தை சேமித்து வைப்பது மின்சார கட்டமைப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 13 துணை மின் நிலையங்களில் மின் அமைப்பை தானாக நிலைநிறுத்தும் Grid-forming மின்கல சேமிப்பு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மின் கட்டமைப்பின் அதிர்வெண் (Frequency) மற்றும் மின்னழுத்தத்தை (Voltage) சுறுசுறுப்பாகக் கட்டுப்படுத்த முடியும். தேசிய மின் கட்டமைப்பில் அதிகளவில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் இணைக்கப்படும் போது, மின் கட்டமைப்பு தடைப்படாமல் நிலையாகப் பேணுவதற்கும் இது உதவும்.
2030ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் இலக்கிற்கு நேரடியாகப் பங்களிக்கும் இந்த வேலைத்திட்டம், மின் கட்டமைப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன், நுகர்வோருக்கும் வணிகங்களுக்கும் மலிவான விலையில்
மின்சாரத்தை வழங்குவதற்கும் பங்களிக்கும். மேலும், வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதைக் குறைப்பதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2025 ஜூலை மாதம் நடத்தப்பட்ட சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பத்திர நடைமுறையில் மூலம் Windforce PLC மற்றும்; Vidullanka PLC ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தைக் கைப்பற்றின. பின்னர் நடத்தப்பட்ட விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையில், இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப விநியோகஸ்தராக Huawei நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி, அரசாங்கத்தின் தேசிய தூய்மை சக்தி திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் 13 திட்டப் பகுதிகளில் நவீன மின்கல சேமிப்பு தொழில்நுட்பத்தை (Grid-forming) நடைமுறைப்படுத்தவுள்ளன.
இவ்வளவு பெரிய அளவிலான மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பை உருவாக்குவதற்கு, திட்ட உருவாக்குநர்களுக்கும் தொழில்நுட்ப விநியோகஸ்தர்களுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பு அவசியமாகும். Windforce PLC, Vidullanka PLC மற்றும் Huawei ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பின் ஊடாக, உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் அனுபவமும் உலகின் அதிநவீன மின்கல சேமிப்பு தொழில்நுட்பமும் ஒன்றிணையும்.
இந்தத் திட்டத்தின் பெரும்பகுதிக்கான முதன்மை தொழில்நுட்ப விநியோகஸ்தராக Huawei நிறுவனம் தனது எரிசக்தி சேமிப்பு தீர்வுகளையும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கவுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா உட்பட ஆசியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட இதுபோன்ற பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு மற்றும் மின் கட்டமைப்பு நவீனமயமாக்கல் திட்டங்களின் மூலம் தாங்கள் பெற்ற திட்ட அமலாக்க அனுபவத்தை இத்திட்டத்திற்காக Huawei நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.
இலங்கை தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைந்து கொள்ளும் நோக்கத்தோடு முன்னோக்கிச் செல்லும்போது, இவ்வாறான பெரிய அளவிலான திட்டங்கள் மூலம் மிகவும் வலுவான, திறமையான மற்றும் நிலையான மின் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு மின்கல எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியையும், நவீன தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்கும் இந்த வேலைத்திட்டம், நாட்டிற்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக இடம்பிடிக்கும்.

