June 21, 2025
பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுமென்பதால் சீனி இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வேண்டாமென இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
செய்தி

பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுமென்பதால் சீனி இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வேண்டாமென இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Jun 9, 2025

சீனி இறக்குமதியின் போது தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்க வேண்டாமென சீனி இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளனர். அவ்வாறான வரி அதிகரிப்பொன்று மேற்கொள்ளப்படுமானால், சீனி விலை சடுதியாக அதிகரிப்பதன் மூலம் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் எனவும் மேற்படி இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றின் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கு தற்போது 50 ரூபாய் வரியாக அறவிடப்படுகின்றது. அதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கு வெறும் 25 சதமே வரியாக அறவிடப்பட்டது. துறை சார்ந்த அறிக்கைகளின் பிரகாரம், இலங்கைக்கு மாதமொன்றுக்கு சுமார் 60000 மெ. தொ சீனி இறக்குமதி செய்யப்படுவதோடு அதன் மூலம் அரசுக்கு 3 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக கிடைக்கிறது.

சீனி இறக்குமதியாளர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், பெலவத்த மற்றும் செவனகல போன்ற உள்நாட்டு சீனி கம்பனிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் சீனி இறக்குமதி மீதான வரி உயர்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் சுமார் 60000 மெ. தொன் சீனியை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் இறக்குமதியார்கள் சிலர் இடைத் தரப்பினர் ஊடாக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி தற்போதுள்ள 50 ரூபாய் வரியை 80 ரூபாய் வரை உயர்த்துவதற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சீனி இறக்குமதியாளர்களின் கருத்தின் படி, குறித்த வரியை 30 ரூபாய் தொகையால் அதிகரித்தால் பெருமளவு சீனி கையிருப்பை வைத்திருக்கும் மேற்படி இறக்குமதியார்கள் சிலர் எவ்வித மேலதிகச் செலவுமின்றி 1.8 பில்லியன் ரூபாய் தொகையை மேலதிக வருமானமாக ஈட்டும் வாய்ப்பை பெறுவார்கள். எவ்வாறாயினும் அவ்வாறான தீர்மானமொன்று எடுக்கப்படும் பட்சத்தில், தற்போது சீனி தொகுதியை ஆடர் செய்துள்ள மற்றும் செய்துக்கொண்டிருக்கும் பாரியளவிலான களஞ்சிய வசதிகள் இல்லாத சிறிய மற்றும் மத்தியளவிலான இறக்குமதியாளர்கள் அதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் பட்சத்தில் தேநீர், பேக்கரி உற்பத்திகள், பலகார வகைகள் மற்றும் பான வகைகள் போன்ற பல்வேறு நுகர்வுப் பொருட்களின் விலை உயருமென்பதால் நுகர்வோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஏனைய நாடுகளுக்கு நிகராக இலங்கையில் ஏற்கனவே சீனி இறக்குமதி மீதான வரி கூடுதலாகவுள்ள பின்னணியில் அதனை மேலும் அதிகரிப்பதன் மூலம் செயற்கையான தட்டுப்பாடு, சந்தையில் ஏற்படும் குழப்பம் மற்றும் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி சுத்திகரிக்கப்படாத காரணத்தினால் பலகாரங்கள், பான வகைகள் மற்றும் பேக்கரி உற்பத்திகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியாது. அத்தோடு, நாட்டின் சீனி தேவையில் 10% சீனியே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close